அம்மா…

ஒவ்வொரு முறையும்
அகண்ட பிரபஞ்சத்தை
அவள் கண்களில் பார்க்கிறேன்...

விடுதியிலோ.,
மணமுடித்தோ,
வெளிநாட்டில் வேலையிலோ..

எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...

வாசனை வீசும் சொற்களுக்குச்
சொந்தக்காரியல்ல...
அநேகமாகக் காரம்தான்...
வைய வைய வைரக்கல்...

சிறுவயதில் கோழியைப்போல்
அவ்வப்போது முடிபற்றி மிதிப்பாள்..
இப்போது வார்த்தைகளால்...

சிலசமயம் புரிந்து கொள்ளாமல்...
சில சமயம் கொடுந்தவறுக்காய்...

அவள் புன்னைகைத்தால்
காலடியில் முயலகனாய்...
என்றென்றும் மயங்கி...

அவளுக்குப் பிடிக்குமென
பலதும் செய்து அவளை
அவதியுற வைத்திருக்கிறேன்...
சமையலாகட்டும்...
செயல்களாகட்டும்...

உதிரத்தில் உருவாக்கி.,
உருவாய் செதுக்கியவளே.,
உன்னோடு கிடந்தே
உழன்று கிடப்பேன் என்று
அவ்வப்போது ஒதுக்கி வைத்து
ஒளிந்து கொள்கிறாயா...?

என் தேவையறிந்து
பசியறிந்து.,
ருசியறிந்து.,
வயசறிந்து.,
நிறைவேற்றியவளே...

செல்லமாக வேண்டாம்...
கோபமாக வேணும் உன் குரலை
சிந்திச்செல் அவ்வப்போது...

0 comments:

Post a Comment