நாள் தவறி போனதே என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்
மார்பில் முகம் புதைத்ததும்
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்
புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி...
மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்
ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்
ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்
மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய்விடுமா உன் அழகு தாய்மையில்...
ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் எனனை?
தினமும் மாலை கை கோர்த்து
நடை பயின்று
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை...
நாட்கள் நெருங்க நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே...
இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்...
சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும் என் தாயும்
உறவினரும் நண்பருமாய்
தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன் கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்...
அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்
சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல...
பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை
அழைத்து கைபற்றி கொண்டாய்....
இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்
பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
நீ எனக்கு உயிரடி....
--Malaikkadhalan
0 comments:
Post a Comment